கோபுர தரிசனம்

கோபுர தரிசனம்



புராண பெயர்கள்: ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம்

அருள்மிகு திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்.

அமைவிடம் 
ஊர்: ஸ்ரீ வாஞ்சியம்
மாவட்டம்: திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு

கோயில் தகவல்கள்:

மூலவர்: வாஞ்சி நாதேசுவரர், வாஞ்சிலிங்கேசுவரர்
தாயார்: மங்கள நாயகி, வாழவந்த நாயகி
தல விருட்சம்: சந்தனம்
தீர்த்தம்: குப்த கங்கை, இமய தீர்த்தம்
ஆகமம்: காமிக ஆகமம்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் திருமால் சிவனை வழிபட்டு இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. எமன் வழிபட்ட தலம்; இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனை இல்லை என்பவையும் தொன்நம்பிக்கைகளாகும்.

திருமகள், இயமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி முதலியோர் வழிபட்ட தலம்.

தலவரலாறு:
இயமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி இயமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார். மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார். இத்தலத்தில் இயமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு.

அமைப்பு:
ராஜகோபுரத்தை அடுத்து கோயிலுக்குள் செல்லும்போது வலது புறத்தில் எமதர்மராஜா சன்னதி உள்ளது. சன்னதியின் முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலது புறம் அபயங்கர விநாயகரும், இடது புறம் பாலமுருகனும் உள்ளனர். இடது புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. கொடி பலி பீடம், நந்தியை கடந்து உள்ளே செல்லும்போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும், இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவரின் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றின் பின்புறம் சந்திரமௌலீஸ்வரர், கன்னி விநாயகர், சட்ட நாதர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அதே வரிசையில் தேயலிங்கம், ஆகாய லிங்கம், திருவெண்காடு லிங்கம், திருவிடைமருதூர் லிங்கம், மயிலாடுதுறை லிங்கம், சாயாவனம் லிங்கம், ஷேத்ரலிங்கம் ஆகியவை உள்ளன. கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.திருச்சுற்றில் குளம் உள்ளது.

சிறப்பு:
இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.

இத்தலத்தில் எம வாகனத்தில் சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.
யமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.

காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று.

கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

அமைவிடம்:
மயிலாடுதுறையிலிருந்து 25கி.மீ தொலைவில் உள்ள நன்னிலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது.திருவாரூர்-குடவாசல் சாலையிலும் வரலாம்.

Previous
Next Post »