சிவசாமி சித்தர்
காஞ்சிபுரத்தில் வாழ்ந்து பற்பல சித்துகளையும், அற்புதங்களையும் நிகழ்த்தியவர் இந்தச் சிவசாமி சித்தர். காஞ்சிபுரம் தெருக்களிலும், வரதராஜ பெருமாள் கோவிலிலும் ஒரு பிச்சைக்காரனைப் போன்று... பித்தனைப் போன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்திருக்கிறார்.
கருத்த உடம்பும் வெள்ளை தாடியும் தீட்சண்ய பார்வையும் கொண்ட இவர் அழுக்கு உடையுடன் உடல் முழுக்க குப்பை கூளங்களை சுற்றிக்கொண்டு இருப்பார். எந்நேரமும் வாயில் இருந்து எச்சில் சுரந்து கொண்டிருக்கும்.
அமானுஷ்ய சக்தி மிகுந்த இவரை பில்லி, சூனியம், பேய், பிசாசு தொல்லைகளுக்கு உள்ளாகி இருப்பவர்கள் நெருங்க முடியாது. இவருடைய பார்வைக்கு இந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் தென்பட்டால் அவ்வளவுதான். இவர் உடனே ஓடிச் சென்று அவர்கள் தலையில் கை வைத்து அந்த மனிதர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை விலகி ஓட செய்துவிடுவார். ஒருசமயம் கருமேக நோயால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் சிவசாமி சித்தரை பற்றி கேள்விப்பட்டு காஞ்சிபுரம் வந்தாள். அவள் உடல் முழுவதும் செதில் போன்ற படையால் பாதிக்கப்பட்டிருந்தது. மிகவும் வேதனையுடன் சித்தரை எல்லா இடங்களிலும் தேடி அலைந்தவள், கடைசியில் ஏகாம்பரநாதர் கோயில் குளக்கரையில் கண்டு கண்களில் மலர்ச்சி பொங்க அருகே சென்றிருக்கிறாள். அந்தப் பெண்ணின் பிரச்சினையை தமது அமானுஷ்ய சக்தியால் தெரிந்து கொண்ட சிவசாமி சித்தர், திடீரென்று அந்தப் பெண்ணை கட்டியணைத்து கீழே உருண்டு இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காதது இது. அருகிலிருந்தவர்கள் என்ன இது? இந்த சித்தருக்குப் பைத்தியமா? இப்படி செய்கிறாரே என்று கோபத்துடனும் ஏளனத்துடன் பார்க்க... சற்று தூரம் அந்தப் பெண்ணோடு உருண்ட சித்தர் பின்பு அவளை விட்டு விலக... அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்தப் பெண் தன் உடலைப் பார்த்தாள். அவள் உடலில் காணப்பட்ட கருத்த செதில் போன்ற படை எல்லாம் உதிர்ந்து கீழே கொட்டி இருந்தது. உடல் எப்போதும் போல் சாதாரணமாக மாறிவிட்டிருந்தது.
கண்ணீருடன் அந்தப் பெண் சித்தரை நோக்கி கரம் கூப்ப , அருகில் நின்றிருந்த காட்சியை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வியந்து போயினர். அன்று முதல் அனைவரும் சித்தரை வணங்க ஆரம்பித்தனர்.
அது மட்டுமின்றி நாளை நடக்கவிருப்பதை முன்கூட்டியே சொல்லி விடும் ஆற்றலும் இவரிடம் இருந்தது. "விதியை மாற்ற முடியாது ஆனால் அந்த விதியில் இருந்து காப்பாற்றுவது தான் இறைத்தன்மை"
என்று இந்த சித்தர் சொல்வதுண்டு. ஆம் உண்மைதான்! அப்படி விதியினால் கொடிய நோய்க்கு ஆளானவர்கள்ளை தன்னுடைய தெய்வீக அருளால் குணப்படுத்தி இருக்கிறார் இவர். காலையில் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து ரிக்ஷாவில் ஏறி கோரிக்கை என்னும் இடத்திற்கு போய், அங்கிருந்து பதினாறுகால் மண்டபத்தில் போய் அங்கு சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு, மறுபடியும் கோவிலுக்கு வருவது என்று இருந்த இவரிடம் ஏராளமானவர்கள் தங்கள் பிரச்சனைகளை கூறி தங்கள் மனக்குறை நீங்கி சென்றிருக்கின்றனர். 1989 இல் சமாதி அடைந்த இந்த சிவசித்தரின் ஆசிரமத்திற்குச் சென்று நம் கோரிக்கைகளை முன் வைத்து வணங்கினால் பல அதிசயங்களை நிகழ்த்துவார் சிவசாமி சித்தர்.
சமாதி அமைந்துள்ள இடம் :
சமாதி ஆசிரமம் பெரிய காஞ்சிபுரம் வெள்ளை குளம் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் காணப்படுகிறது.

1 Comments:
Click here for Commentsசித்தர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் பெருமை போற்றும் இருந்த தளம் மிகவும் அற்புதமாகக் காட்சி அளிக்கிறது... தோழர் லட்சுமி நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ConversionConversion EmoticonEmoticon